(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு - டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 7 மணிக்கு மத்திய செயற்குழு கூடவுள்ளது.
இதன்போது மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட நடைமுறை அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில விவகாரங்களில் அரசாங்கத்துடன் சுதந்திர கட்சிக்கு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில் நீண்ட நாட்களின் பின்னர் கட்சியின் மத்திய குழு கூடவுள்ளமை முக்கியமான விடயமாகும்.
அரசாங்கத்தினால் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்களில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளை கூடவுள்ள மத்திய குழுவில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்டதாகவும், எனினும் தற்போது தாம் புறக்கணிக்கப்படுகின்றமை அதிருப்தியளிப்பதாக சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
மீண்டும் பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களால் சுதந்திர கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தலைமைத்துவ மட்டத்தில் ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment