கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கு தொடர்பில், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட இருவர் மீது சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகள் வலுவற்றது என, மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் A.H.M.D. நவாஸ் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழு இன்று (20) எழுத்துமூல கட்டளையை (ரிட் கட்டளை-Writ order) பிறப்பித்துள்ளது.
குறித்த கொலைக் குற்றச்சாட்டுக்கு எதிராக மனுதாரரான அமைச்சர் ஜனக பண்டார தென்கோன், மகாவல பகுதியில் கடந்த 1999 இல் இடம்பெற்ற குறித்த கொலை வழக்கு தொடர்பாக, 2015 இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தனக்கு எதிராக, கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், சட்டமா அதிபரினால், சட்டவிரோதமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றச்சாட்டுகளை செல்லுபடியற்றதாக்கும் எழுத்துமூல கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தர்க்க ரீதியாக வலிதற்றது என அறிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்கேற்காமல் ஒரே நாளில் இவ்வழக்கு முடிவடைந்துள்ளதாக, தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதோடு, அது சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.
அதன்படி, குறித்த வழக்கின் பரிந்துரைகளின் அடிப்படையில் கண்டி மேல் நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டும் சட்டத்திற்கு எதிரானது என்று அவர் அறிவித்தார். அதன்படி, குறித்த வழக்கை இரத்து செய்யும் ரிட் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment