(எம்.நியூட்டன்)
கொரோனா தொற்று நோயிலிருந்து நாமே எம்மைப் பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா உணவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும், மக்கள் உணவுப் பண்டங்களை பாதுகாப்பாக பெறுவதற்கும் அரசுத் துறையினர் உதவ வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தாக்கம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொரோனா புதிய வடிவத்திலான தொற்று இரண்டாவது அலையாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருகின்றது. இத்தொற்றானது சமூக பரவலை எட்டிவிட்டது என்றும் கருதப்படுகிறது. தேசியப் பேரழிவை ஏற்படுத்தப் போகிறதென்றும் எச்சரிக்கப்படுகிறது.
இந்நோய் தொற்றின் தீவிரம் உலகம் முழுவதும் சமூக, பொருளாதார பாதிப்புக்களையும் அனைத்து துறைகளும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் அவற்றுக்கு அப்பால் உயிர் ஆபத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இந்நோய் அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் உள்ளது.
இந்நோய் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டோரை மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த மக்களையும் இலகுவில் தொற்றி மரணத்தை ஏற்படுத்தி வரும் ஆபத்தும் உண்டு.
இலங்கையில் முப்பதாண்டுக்கும் மேலாக இடம்பெற்ற போர் காரணமாக தமிழ்த் தேச மக்களில் இலட்சக்கணக்கான மக்கள், இளம் சமூகம் உயிர் பலியாகியது மட்டுமல்ல ஊட்டச் சத்தற்றவர்களாக குறிப்பாக பிறக்கின்ற குழந்தைகளும், கற்பிணித் தாய்மாரும் 70 - 80 வீதமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இதனை ஐ.நா “யுனிசெப்” குழந்தைகள் நிறுவனம் கூறி வருகின்றது. ஏற்கனவே எம்மினம் இலட்சக்கணக்கில் உயிரிழப்புக்களைச் சந்தித்து விட்டது. இதனாலும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கொரோனா நோயினால் பாதிப்புக்கள் அதிகரிக்க முடியும்.
கொரோனா தொற்று நோய்க்கு மருந்து 2021 நடுப்பகுதியில்தான் மக்கள் பாவனைக்கு வரும் என ஐ.நா. சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்ப் பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இந்நோய்க்கான வைரஸ் கிருமி புதுப்புது வடிவங்களில் வெவ்வேறு வகை இரத்த ஓட்டமுள்ளோரிடம் வெவ்வேறு வகையில் பரவ வாய்ப்புக்கள் உண்டு என மருத்துவத்துறை விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.
இதனால் உலக சுகாதாரத் துறையும் இலங்கை மருத்துவத் துறையினரும் மக்களின் உயிர் பாதுகாப்பின் பொருட்டு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும் அறிவிப்புக்களுக்கும் நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
மக்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணுவதுடன் பெருமளவில் கூட்டமாயில்லாமல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து தம் அலுவல்களைப் பேணவும், அதன் மூலம் இந்நோய் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment