மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில், குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குஞ்சுக்குளம் சந்தியில் உள்ள பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 486 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த வரகாபொல பகுதியைச் சேர்ந்த 36, 42 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் மடு பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)
No comments:
Post a Comment