செலவை கையாள 3000 பில்லியன் கடன் பெற வேண்டியுள்ளது, கடன் அட்டைகளின் பாவனையால் 412 கோடிகளை வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம் - விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

செலவை கையாள 3000 பில்லியன் கடன் பெற வேண்டியுள்ளது, கடன் அட்டைகளின் பாவனையால் 412 கோடிகளை வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம் - விஜயதாச ராஜபக்ஷ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவை கையாள 3000 பில்லியன் கடன் பெற வேண்டியுள்ளது, சர்வதேச கடன்களை பெற்றுக் கொண்டால் தேசிய ரீதியில் எவ்வாறு செலவுகளை கட்டுப்படுத்துவது என கருத்தில் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு கணிப்பின் பிரகாரம் ஒரு ஆண்டில் 412 கோடி ரூபாய்கள் கடன் அட்டைகளின் மூலமாக வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

வரவு செலவு திட்டமொன்று முன்வைக்கும் வேளையில் இதுதான் சிறந்த வரவு சிலவு திட்டம் என ஆளும் கட்சியும், இதுதான் மோசமான வரவு செலவு திட்டம் என எதிர்கட்சியும் கூறுவதே வழக்கம். ஆனால் இது அரசாங்கத்திற்கு மாத்திரம் சார்ந்த விடயம் அல்ல, நாட்டின் அவசியம்.

எனவே இதில் ஆளும் எதிர்க்கட்சிகள் இணைந்தே தீர்வொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கு 3000 பில்லியன் கடன் தேவைப்படுகின்றது. இந்த தொகை முழுமையாக எமக்கு கிடைக்கும் என கூற முடியாது.

ஆனால் நாம் வரையறுத்துள்ள தொகையை விடவும் அதிக கடன்களை நாம் பெற்றுக் கொள்ள நேரும். இதனை தேசிய ரீதியில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் ஆராய வேண்டும்.

நாட்டு மக்களின் கைகளில் பணம் புழங்கினால் அது ஆரோக்கியமான விடயம், ஆனால் இன்று நாட்டின் அனர்த்த நிலையில் மக்களிடம் பணம் இல்லை, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக விழும். 

எனவே புதிதாக பணம் அச்சிட வேண்டும். அதேபோல் எமது பணம் வெளிநாடுகளுக்கு செல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் இங்கு கடன் அட்டைகளில் வியாபாரம் செய்யும் வேளையில் அதில் ஒரு தொகை வெளிநாட்டிற்கு செல்கின்றது.

இதனை தவிர்க்க தேசிய ரீதியில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு கணிப்பின் பிரகாரம் ஒரு ஆண்டில் 412 கோடி ரூபாய்கள் கடன் அட்டைகளின் மூலமாக வெளிநாடுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம்.

எனவே கியூ.ஆர் முறைமையை 2018 ஆம் ஆண்டில் கொண்டு வந்தமை வெற்றியளித்தது. ஏனைய நாடுகளும் இந்த திட்டத்தை கையாண்டு வெற்றி கண்டுள்ளனர். இந்தியா இதற்கு நல்லதொரு உதாரணம். 

எனவே நிதி அமைச்சு இதனை கருத்தில் கொள்ள வேண்டும், மத்திய வங்கி என்னதான் முயற்சிகளை எடுத்தாளும் நிதி அமைச்சு இதில் அக்கறை செலுத்தியாக வேண்டும். சுயாதீன நிறுவனங்கள் அரசியல் மயமாவதை தடுக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய வங்கியில் அரசியல் தலையீடுகள் இருந்ததன் காரணமாகவே இலங்கையை சேராத ஒருவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆனார். ஆகவே இந்த செயற்பாடுகள் தடுக்கப்படும் விதமாக நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment