அரசாங்கத்தை விமர்சிக்கும் 200 பத்திரிகையாளர்களை கைது செய்ய திட்டம், நாளாந்த வருமானம் உழைப்பவர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

அரசாங்கத்தை விமர்சிக்கும் 200 பத்திரிகையாளர்களை கைது செய்ய திட்டம், நாளாந்த வருமானம் உழைப்பவர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 பத்திரிகையாளர்களை கைது செய்யும் திட்டம் இலங்கை பொலிஸாரிடம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கம் பத்திரிகையாளர்களை இலக்கு வைக்கின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் பட்டியலொன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களை கைது செய்வதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

200 ஊடகவியலாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ளது என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இளம் தலைவராகயிருந்தவேளை மஹிந்த ராஜபக்ச மனித உரிமைக்காக போராடி ஜெனீவா வரை சென்றவர் என்பதை இம்தியாஸ் பாகீர் மார்க்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக மனித உரிமைகளிற்காக குரல் கொடுத்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல என தெரிவித்துள்ள இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இது கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு உலகமும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, தொழிற்சாலைகளும் வர்ததக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன, வர்த்தக நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ள இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மனிங் சந்தையில் நாளாந்தம் உழைப்பவர்கள் முதல் தனது முச்சக்கர வண்டியை லீசிங்கில் பெற்ற முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை மிகவும் நெருக்கடியான தருணங்கள், அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும், எனினும் வரவு செலவுத் திட்டத்தில் இதனை காணமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment