கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வட கொரியா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வட கொரியா

ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய வகை ஏவுகணையை வட கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வட கொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடனான சந்திப்பிற்கு பின்னரும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த சோதனைகள் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த வகை ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் பதற்றத்திலேயே இருந்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக உலகமே நிலைகுலைத்துள்ளபோதும் புதிய வகை ஏவுகணை ஒன்றை வட கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

வட கொரிய ஆளும் கட்சியின் 75வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் அணு ஆயுத வல்லமை கொண்ட புதிய வகை ஏவுகணை இடம்பெற்றது.

அதேபோல் ஹிவாசங்-15 என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூட்டிய அதிநவீன நெடுந்தூர ஏவுகணையும் இடம்பெற்றிருந்தது. 

அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த புதிய வகை ஏவுகணை 11 சக்கர ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த வகை ஏவுகணை இதற்கு முன்னதாக எந்த ஒரு ராணுவ அணிவகுப்பிலோ அல்லது சோதனையிலோ இடம்பெறவில்லை.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜங் உன், சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு வட கொரியா தொடர்ந்து ராணுவத்தை வலுப்படுத்தும் என்றார். மேலும், நாட்டில் நிலவி வரும் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மேலும், பேசிய கிம், வட கொரியாவில் யாருக்குமே கொரோனா தொற்று பரவவில்லை என பெருமிதம் கொண்டார். வைரஸ் பரவலை தடுக்க உதவிய ராணுவத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று சிறிது நேரம் கழித்தே வட கொரிய ஊடகங்களில் நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டது. 

இதற்கிடையில், வட கொரியா புதிய வகை ஏவுகணையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment