பூகொடை, பண்டாவள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த 21 வயதான இளைஞர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், பூகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது கணவர் கைதான தினம் இரவு ஒரு சில நபர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாக, அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சாட்சியங்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பூகொடை பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மற்றும் 7 வெளியாட்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களை இன்றையதினம் (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment