நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 204 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நிறைவடைந்துள்ளது. இன்னும் 313 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அரசாங்க உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் சுகாதார துறையின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பகுதியில் 9 பேரும், பொகவந்தலாவை பகுதியில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், ஹங்குரன்கெத்த பகுதியில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும், கொட்டகலை பகுதியில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரும், கொத்மலையில் 40 பேரும், மஸ்கெலியாவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், மதுரட்ட பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், புதிய திஸ்பனை பகுதியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேரும், நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரும், இராகலை பகுதியைச் சேர்ந்த 2 குடும்பங்களில் 4 பேரும், வலப்பனை பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை கிராம சேவகர்களும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து எங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன்போது வருமானம் குறைந்த, உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

அதேநேரம் நுவரெலியாவில் விக்டோரியா பூங்கா மற்றும் உலக முடிவு ஆகிய சுற்றுலா தளங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டள்ளது. படகு சவாரி, குதிரை சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன் நுவரெலியா நகரில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அந்த உணவக உரிமையாளர்களும் அங்கு கடமை புரிந்தவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டு அதில் தற்பொழுது தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு ஒரே நேரத்தில் 250 பேர் தனிமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்காக நுவரெலியாவில் நட்சத்திர விடுதி ஒன்று செயற்பட்டு வருகின்றது. அதில் கடந்த காலங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது எனவும் மேலும் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 517 பேரில் இதுவரை 204 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான முடிவுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எஞ்சியுள்ள 313 பேருக்கு தற்பொழுது பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. 

மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று உறுதியானவர்களில் 13 பேர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் நுவரெலியா மாவட்டத்தில் நவதிஸ்பனே, வலப்பனை, ஹங்குரங்கெத்த, கந்தப்பளை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். 

இங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ், நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 125 பாடசாலைகளை சேர்ந்த 12900 பேர் பரீட்சைக்கு முகம் கொடுத்தனர். 

இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வருகை தந்த கொத்மலை பகுதியைச் சேர்ந்த 8 மாணவர்களும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுமாக மொத்தம் 10 மாணவர்களுக்கு அந்தந்த பாடசாலைகளில் விசேட பரீட்சை முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

அதேநேரம் தற்பொழுது நடைபெற்று வருகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 10874 மாணவர்கள் 83 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இவர்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற 3 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இவர்களுக்கு தனியான அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment