பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமல்ல - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

பரிசோதனையில் பங்கேற்றவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமல்ல - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விளக்கம்

தங்கள் பரிசோதனையில் பங்கேற்றவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால்தான் பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. 

இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 

ஆனால், இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு முதுகு தண்டுவத்தில் பாதிப்பு ஏற்பட்டது கடந்த 6ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பக்கவிளைவு ஏற்பட்டதாக இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால், கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. 

இதையடுத்து நிறுத்தப்பட்ட ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், அமெரிக்காவில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளது. 

இந்நிலையில், தங்கள் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களின் விவரங்கள் தொடர்பான தகவல்களை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

இதில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படும் தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து கூறுகையில், ’சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின் பக்கவிளைவு பாதிப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை அல்லது கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால்தான் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்பதை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment