(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு தனியான பிரேரணை ஒன்றை முன்வைப்பேன். அமைச்சு பதவி வகித்தாலும் 13 ஐ இல்லாமலாக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போதே 13 ஆவது திருத்தம் இல்லாமலாக்கப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் எனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தேன். 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என ஆளும் தரப்பு கூட்டத்தில் கருத்து முன்வைத்தேன். எனது கருத்தை சிலர் ஆட்சேபித்தார்கள். அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எனவே 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் எனது பிரேரணையை அரசாங்கத்திற்கு முன்வைக்க இருக்கிறேன். இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளினால் மக்களுக்கு பிரயோசனம் இருந்ததா, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது, மாகாண அமைச்சர்களாக கல்வி, விவசாய அமைச்சர்கள் இருந்துள்ளனர். அவர்களால் இந்த துறையின் முன்னேற்றத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது போன்ற விடயங்களை தேடிப்பார்க்கும் பொறுப்பு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்கு இருக்கின்றது. அது தொடர்பில் தேடிப்பார்த்து அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன்.
மேலும் மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாரியளவில் வீணடிக்கப்பட்டிருக்கின்றது. மாகாண சபைகளுக்கு கல்வி அமைச்சர்கள், விவசாய அமைச்சர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டாலும் அவர்களால் என்ன செய்ய முடிந்தது என எனக்கு தெரியாது.
சகல தேவைகளுக்கும் கொழும்பிற்கு வர வேண்டும். எனவே இந்த மாகாண சபை முறை பயனற்றது என்ற நிலைப்பாட்டிலே நான் தொடர்ந்து இருக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment