(எம்.மனோசித்ரா)
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.
இம்முறை தேர்தலில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் ஒரு கோடியே 23 இலட்சத்து 43 ஆயிரத்து 302 பேர் வாக்களித்திருந்தனர். இது நூற்றுக்கு 75.89 சதவீதமாகும்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஒரு கோடியே 15 இலட்சத்து 98 ஆயிரத்து 929 வாக்குகள் செல்லுபடியானவை என்பதோடு 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகளை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் தேர்தல் அறிவு, முறையாக வாக்களித்திருக்காமை, தவறான தெரிவுகள் (கட்சி, இலக்கம்) என்பவற்றோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக பெரும்பாலான ஐ.தே.க. ஆதரவாளர்கள் வாக்களிப்பை தவிர்த்திருந்தமை என்பனவே அந்த காரணிகளாகும்.
2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட 4 கோடியே 99 இலட்சத்து 904 வாக்குகளில் 18 ஆயிரத்து 770 வாக்குகள் மாத்திரமே நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment