தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு என்பது தென்னிலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தேசிய நல்லிணக்கத்தினூடாக மாத்திரமே சாத்தியமாகுமென தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேசத்தினூடாக அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது வெறும் பித்தலாட்டம் எனவும் தெரிவித்தார்.
வட மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், “அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்” என்பது போல எமது பிரச்சினையை நாங்கள் தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதைவிடுத்து எமது பிரச்சினைக்கான தீர்வை வேறு யாரிடமும் எதிர்பார்க்க முடியாதென்றார்.
சக கட்சிகள் கூறுவது போன்று சர்வதேசத்தின் ஊடாக எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படும். எவ்வாறெனினும், சர்வதேச நாடுகளை சாமர்த்தியமாக கையாள வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இட்லிக்கு சட்ணியைப் போல சர்வதேசத்தை நாம் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment