குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கான திட்டமா ? அஜித் பி பெரேரா கேள்வி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 30, 2020

குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கான திட்டமா ? அஜித் பி பெரேரா கேள்வி

மஹிந்தானந்த அளுத்கமகேவின் குற்றச்சாட்டு குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கான திட்டமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2011 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியை இலங்கை இந்தியாவுக்கு தாரைவார்த்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பொருட்படுத்த வேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை வெறுமனே விட்டுவிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்தவே இருந்தார். அவர் அப்போது ஒன்றும் கூறாது 10 வருடங்கள் கழிந்த பின்னர் இவ்வாறு கூறுவதானது குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மத்தியில் இருக்கும் வரவேற்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு எண்ணமாகவும் இருக்கலாம்.

ஏன் என்றால்? தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்காரவே நியமிக்கப்பட்டிருந்தார். கிரிக்கட் விளையாட்டுத்துறையின் ஊடாகவே சர்வதேச மத்தியில் இலங்கைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

முன்னாள் அணித் தலைவர் சங்ககராவிற்கும் சர்வதேச மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் அவர் கொண்டுள்ள தனிப்பட்ட திறமை மற்றும் நிர்வாகத்துறை தொடர்பில் அவர் கொண்டுள்ள தனிப்பட்ட திறமையின் காரணமாக அவரை மார்லிபோர்ட் கிரிக்கட் கழகம் (எம்.சி.சி) இரு முறை தலைவராக தெரிவு செய்திருந்தது.

தற்போது சர்வதேச கிரிக்கட் பேரவையும் (ஐ.சி.சி) அதன் தலைவராக சங்ககாரவை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த பதவியை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் அவருடன் போட்டியில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்த வேறொரு நபருக்கு அந்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில், சங்ககாரவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மஹிந்தானந்த இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தாரா? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment