யுத்தம் நிறைவடைந்தாலும் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் ஓயவில்லை - பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

யுத்தம் நிறைவடைந்தாலும் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் ஓயவில்லை - பேராசிரியர் ஜி.எல். பீறிஸ்

(இராஜதுரை ஹஷான்) 

யுத்தம் நிறைவடைந்தாலும் விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் நிறைவு பெறவில்லை. என்பதை ஒருபோதும் மறக்க முடியாது. இராணுவத்தினருக்கான உரிய கௌரவத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவு பெற்று இன்றுடன் 11 வருடம் பூர்த்தியாகின்றன. பல இழப்புகளுக்கு மத்தியிலே யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது. யுத்தம் நிறைவு பெற்றுள்ளதே தவிர யுத்தத்துக்கான அடிப்படை நோக்கம் இல்லாதொழிக்கப்படவில்லை. 

விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட சர்வதேச அமைப்புக்கள் இன்றும் பிரிவினைவாத கொள்கையுடன் செயற்பட்டு நாட்டுக்கு எதிரான அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. 

நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராகவும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச அமைப்புகளுக்கு ஆதரவாகவும் செயற்பட்டது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை இராணுவத்தினர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். மறுபுறம் புலனாய்வு பிரிவினர் அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தப்பட்டார்கள். இதன் தாக்கத்தை நாட்டு மக்களே அண்மையில் எதிர் கொண்டார்கள். 

தேசியத்தை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இராணுவத்தினரை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பொதுத் தேர்தலின் வெற்றியின் ஊடாகவே முழுமை பெறும். ஜனாதிபதியின் கொள்கையினை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment