இராஜகிரியவிலிலும் கொலன்னாவையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக நேற்றையதினம் (05) அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் தேசிய வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று (06) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிருந்து இவர்களின் பெயர்களை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றையதினம் மரணமடைந்த மோதறை பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலொன்னாவ - சாலமுல்ல மற்றும் ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர, கண்டி - கொலபிஸ்ஸ ஆகிய மூன்று பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொலொன்னாவ - சாலமுல்ல பகுதியில் 27 பேர், ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 பேர், கண்டி கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 67 பேர் உள்ளிட்ட 138 பேர், நேற்றையதினம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment