(இராஜதுரை ஹஷான்)
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை தொடுக்கவில்லை. அச்செயற்பாடு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை சீர் செய்ய அரசாங்கத்திற்கு அது ஒரு சாதகமான சூழலாக காணப்பட்டது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினரது செயற்பாடு அவ்வாறு கிடையாது. நெருக்கடி நிலையிலும் அரசியல் இலாபம் தேடிக்கொள்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை எதிர்த்தரப்பினர் தொடர்ந்து கேள்விக்கு உற்படுத்தியதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள் அமைப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை முன்னெடுக்கவில்லை.
அப்போதைய நெருக்கடி நிலையினை சமாளிக்க அவரவர் தரப்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் அது அரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்தது. நெருக்கடி நிலையில் விடுதலை புலிகள் அமைப்பு செயட்பட்டவாறு தற்போதைய எதிர்க்கட்சியினர் செயற்படவில்லை. இவர்களது செயற்பாடுகள் சுயநல தேவைகளை அடிப்படையாக கொண்டமைந்துள்ளன.
பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தாக்கலில் இருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வரை அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுவதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. நீதிமன்றம் உரிய தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜூன் மாதம் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய சுகாதார துறையின் அதிகாரகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுகாதார, பாதுகாப்பு தரப்பினரது ஆலோசனைக்கு அமையவே அரசாங்கம் செயற்படும் என்றார்.
No comments:
Post a Comment