நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம் செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுத்தம் செய்யக்கூட முடியாதவர்களே ஹக்கீமும், றிஷாத்தும் : அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸீக்

நூருல் ஹுதா உமர்

கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நான்கு வருடங்கள் ஏமாற்றுவித்தைகளையே செய்து காட்டிவிட்டுச் சென்றனர். தேர்தல் மேடைகளில் கூறிய எந்த வாக்குறுதிகளையும் செய்துகொள்ளச் சக்தியற்றவர்களாகவே காலத்தை கடத்தி கதிரைச் சூடேற்றம் செய்திருந்தார்கள். நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கவோ, வட்டமடுவை மீட்டுத் தரவோ, கரும்புக் காணிகள் விடயத்தில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்து விட்டு அக்கரை மண்ணுக்கும், வாக்களித்த மக்களுக்கும் அநீதி இழைத்தார்கள் என தேசிய காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ. றாஸீக் குற்றம் சாட்டினார்.

நேற்று (22) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் பேசுகையில், இருவருடங்களுக்கு முன்னர் நுரைச்சோலையில் தீப்பிடித்துக்கொண்ட போது மாநகரசபை உதவியுடன் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்த வீட்டுத்திட்டம் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடாக இருந்ததை கண்டதும் மிகவும் கவலையடைந்தேன். சவுதி அரசினால் செய்யப்பட்ட இந்த உதவி மக்களுக்கு உபயோகமில்லாது இருப்பது வேதனையளிக்கிறது.

குறித்த பிரதேசத்தின் தவிசாளராக நானும் பிரதேச செயலாளரும் அரச அதிபரை சந்தித்து இதுதொடர்பில் பேசிய போது நீதிமன்றத்தை மதித்து செயலாற்ற வேண்டிய தேவை இருப்பது உணரப்பட்டது.

ஆனால் கடந்த அரசாங்கத்தை நான்கு ஐந்து வருடங்கள் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரசும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் நினைத்திருந்தால் அந்த நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அதை அவர்கள் செய்யவில்லை என்பதை விடவும், செய்ய முடியாதவர்களாக மறைந்து கொண்டார்கள்.

குறைந்தது அந்த பிரதேசத்தை சுத்தம் செய்யக்கூட முடியாமல் வீணாக தேர்தல் மேடைகளில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம், வட்டமடு காணிமீட்பு, கரும்புக் காணி தொடர்பாக தேர்தல் வாக்குறுதிகளால் மக்களை பிழையாக வழிநடாத்தி (வாக்குகளுக்காக மட்டும்) அக்கரை மண்ணின் அரசியல் அதிகாரத்திற்கு அநீதி இழைத்தார்கள்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் தேசிய காங்கிரஸின் அரசியல் அதிகாரம் இவ்வகை ஏமாற்றுக்களால் இதயத்தில் வலிசுமந்த மக்களின் நோவினைக்கு நிச்சயம் ஒத்தணம் கொடுக்கும் என்பதனை உறுதியாகச் சொல்லிக் கொள்கின்றேன் என்றார்

No comments:

Post a Comment