(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத தன்னை கைது செய்தமை, தடுப்புக் காவலில் வைத்துள்ளமையால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரியே சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி இதுவரை மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சட்டத்தரணிகளின் சேவையைப் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படும் போதும் கைது செய்யப்படுகின்றமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ. திலகரத்ன, பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரின் உறவினர்களால் ஏற்கனவே இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment