ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அதன் தலைமையிடம் இருந்தும் என்னை தூரமாக்கும் நோக்கில் பல சதித்திட்டங்களை தீட்டி போலியான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரு ஆகிய கட்சிகளும் கூட்டாக இணைந்து சாய்ந்தமருது மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று நான் கூறியதாக பல விடயங்களை முன்வைத்து முகநூல் வாயிலாக பல போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் போலியானதாகும். இதனை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
எனது கட்சி மீதும் அதன் தலைமை மீதும் வைத்துள்ள எனது நெருக்கமான உறவினை யார் நினைத்தாலும் தூரமாக்க முடியாது. நான் இருக்கும்வரை எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்தான் தொடர்ந்தும் பயணிப்பேன். இதை யார் நினைத்தாலும் மாற்றமுடியாது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறான போலிச் செய்திகளை பரப்பி என்னையும் எனது கட்சியின் ஆதரவாளர்களையும் குளப்பிவிட்டு எனது வாக்கு வாங்கியினை குறைக்கும் நோக்கில் சில தீய சக்தியினர் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு போலியான செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
No comments:
Post a Comment