அமெரிக்காவின மிசூரியில் கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்ட நபர் ஒருவர் எவ்பிஐயுடனான துப்பாக்கி மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உள்ளுர் பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளுக்காக குறிப்பிட்ட நபரை பெல்டென் நகரில் அதிகாரிகள் கைது செய்ய முயன்றவேளை இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் பல இலக்குகளை திட்டமிட்டபோதிலும் இறுதியாக மருத்துவமனையை தெரிவு செய்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமோதி ஆர் வில்சன் என்ற சந்தேகநபர் பல மாதங்களாக கண்காணிப்பில் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் கறுப்பின மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் பள்ளிவாசல்கள் போன்றவற்றை தாக்க திட்டமிட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் பெல்டென் நகரில் இனந்தெரியாத மருத்துவமனையை தகர்க்க திட்டமிட்டார் என அதிகாரிகள் கன்சாஸ் நகர மக்களை எச்சரித்திருந்ததுடன் அவர்களை வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர் பல இலக்குகளை தெரிவு செய்த பின்னர் இறுதியாக பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு மருத்துவமனையை தெரிவு செய்தார். அது இன்றைய சூழலில் மிக முக்கியமான மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டை தயாரிப்பதற்கான அத்தியாவசியமான பொருட்களை அந்த நபர் பெற்றிருந்தார் என எவ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றவேளை மோதல் இடம்பெற்றுள்ளது அவ்வேளை அந்த நபர் வெடிபொருள் ஒன்றினை பயன்படுத்த முனைந்துள்ளார், அதனை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment