(எம் .மனோசித்ரா)
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட முடியும் என்றும் கடற்றொழில் சார் அடையாளத்தை உறுதிப்படுத்துபவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தொழில்சார் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுவர் எனவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்ற கடலுணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் இதன் காரணமாக பெருந் தொகையான நஸ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று செவ்வாய்கிழமை நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர், நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளையடுத்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஆழ்கடலில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் செயற்பாடுகளை தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை (ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும்) மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment