எங்களுடைய அதிகளவு நேரத்தை வேலை செய்யும் இடங்களிலேயே செலவிடுகின்றோம். ஆகவே, COVID-19 எனப்படும் கொரோனா வைரஸுக்கு எதிராக எவ்வாறு வேலை செய்யும் இடங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை குறித்து நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென சுகாதார மேம்பாட்டு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உங்கள் வேலை செய்யும் இடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற லேசான அறிகுறிகளை யாராவது காட்டினால், முழுமையாக குணமடையும் வரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவருக்கு / அவளுக்கு அறிவுறுத்துங்கள்.
முடிந்தால், வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கவும். கதவு கைப்பிடிகள், தொலைபேசி ரிசீவர்கள், மேசை மேற்பரப்புகள், ஸ்டேபிளர் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்தும் உபகரணங்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் கைகளை சவர்க்காரத்தைப் பயன்படுத்தி அடிக்கடி நன்கு கழுவுங்கள். உங்கள் முகம், வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
COVID-19 வைரஸ் பொதுவாக தொடர்பு மூலமே பரவுகிறது. முடிந்தவரை மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்கவும். கூட்டங்களை ஒத்தி வைத்து, வீடியோ கான்பரன்சிங் மற்றும் குழு அழைப்பு போன்ற நவீன தகவல் தொடர்பு முறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் பணியிடத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை நீங்கள் குறைத்தால், உங்கள் அன்பான குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம் என இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment