பெகோ சமன் தொலைபேசியில் 'நாமல் சேர்' : அச்சமடைய வேண்டாம், உண்மை வெளிவரும் - பிரதி அமைச்சர் ஜயசிங்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 24, 2025

பெகோ சமன் தொலைபேசியில் 'நாமல் சேர்' : அச்சமடைய வேண்டாம், உண்மை வெளிவரும் - பிரதி அமைச்சர் ஜயசிங்க தெரிவிப்பு

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு இல்லையாயின் நாமல் ராஜபக்ஷ அச்சமடையத் தேவையில்லை. அச்சமில்லை, அச்சமில்லை என்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டுக் கொண்டு திரிகிறார்.' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. இந்த நாமலா அல்லது பிறிதொரு நாமலா, என்பது எமக்கு தெரியாது. ஆகவே அச்சமடைய வேண்டாம். உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதைப் பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போதைப் பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்த்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப் பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை. இலகுப்படுத்தப் போவதுமில்லை.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆடை அணிந்துகொண்டா போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று எண்ணத் தோண்றுகிறது. ஐ.ஆர்.சி. ஆவணப்படுத்தலில் 1305/ 2015 கீழ் 'பி' தரத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிக்காகவே எதிர்க்கட்சியினர் இன்று முன்னிலையாகுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் 35 பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளார்கள். கொலை செய்யப்பட்டவரை தவிர்த்து மிகுதி 34 பேருக்கு எவ்வித அச்சுறுத்தலும், பாதிப்பும் ஏற்படவில்லை.

மாகந்துரே மதூஸ் வெளிப்படுத்திய உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டன. மைத்திரி, ரணில், சஜித் ஆகியோர் அன்று அரசியல் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள். அதேபோல் கோட்டபய மற்றும் ரணில் - ராஜபக்ஷர்கள் குற்றவாளிகளை பாதுகாத்தார்கள்.

நாமல் ராஜபக்ஷவின் சகாவான தங்காலை பிரதேச சபைத் தலைவர் வெளிநாட்டவர் ஒருவரை கொலை செய்தார். நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கையில் அதை அந்த பெண்ணின் கணவர் தடுத்துள்ளார். அதனால் அந்த வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டார். சம்பத் மனம்பேரி, பெகோ சமன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்.

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு எந்த நாட்டில் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால் குறிப்பிடுங்கள். உலகில் அவ்வாறு எங்கும் இல்லை. பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு இல்லையாயின் நாமல் ராஜபக்ஷ அச்சமடையத் தேவையில்லை. அச்சமில்லை, அச்சமில்லை என்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டுக் கொண்டு திரிகிறார்.

ஒருசிலரது தொலைபேசியில் ' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ' என்று உள்ளது. பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. இந்த நாமலா அல்லது பிறிதொரு நாமலா, என்பது எமக்கு தெரியாது. ஆகவே அச்சமடைய வேண்டாம்.

கொள்கலன்களை ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் தோளில் வைத்துக் கொண்டு திரிய வேண்டும். கொள்கலன் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஹெலிகொப்டர் அனுப்பி குற்றவாளிகளை நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை என்று பொதுமக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா போதைப் பொருளுடன் அகப்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் நீர்கொழும்புக்கு வந்து நிமல் லன்சாவை கட்டிப்பிடித்தார். போதைப் பொருள் வர்த்தகத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

No comments:

Post a Comment