(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தல் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.
நீதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவோம். கடந்த 09 மாத காலத்துக்குள் மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தினோம்.
மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கலால் ஆணைக்குழுவினால் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியாத தடை காணப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றம் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கல் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து உயர் நீதிமன்றம் பலமுறை வியாக்கியானமளித்துள்ளது.
நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றமை வரவேற்கத்தக்கது.
மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகளால் செயலாற்றப்பட வேண்டும்.
இலங்கையின் தேர்தல் கட்டமைப்பில் மாகாண சபைத் தேர்தல் ஒரு பிரதான அங்கமாக காணப்படுகிறது. ஆகவே அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.
No comments:
Post a Comment