(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் அனைத்து இன, மத மக்களுக்கும் அதன் பிரதிபலன்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரிவினைவாதங்களையும் இல்லாதொழித்து சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டில் மனித உரிமையை பாதுகாக்க முடியும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நாம் செல்லும்போது எமது நாட்டில் நாம் எதிர்நோக்குகின்ற சவால்கள், தீர்மானங்கள் தொடர்பில் ஒரு நாடு என்ற வகையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பேதம் எதுவுமின்றி ஒன்றாக ஆலோசித்து சரியான தீர்வுகளை, முக்கிய விடயங்களை அங்கு பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஒரு நாட்டின் நீடித்து நிலைக்கும் அமைதிக்கு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பு, நீதி, சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பது கட்டாயத் தேவை என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம். இந்த சவால்களை எதிர்கொள்வதன் மூலமே ஒரு உண்மையான ஜனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை முழுமையாக நம்புகின்ற ஒரு அரசியல் கட்சியே எமது கட்சி.
மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் தொடர்பில் நாம் பேசும்போது அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்கும்போது முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி பற்றி பேச வேண்டியுள்ளது.
அந்த வகையில் ஒரு நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தமக்கு அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொருளாதார உரிமை, சமத்துவத்தை வழங்குவது முக்கியமாகிறது.
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோமானால் அதில் ஒவ்வொருவருடைய பங்கும் எத்தகையது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தியில் சமமான பங்கு அனைத்து பிரதேச மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.
அந்த வகையில் அரசாங்கம் வட மாகாணத்தில் வீதி அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி பெண்கள் தொடர்பான அபிவிருத்தி போன்றவற்றிற்கான திட்டங்களை எமது வரவு செலவுத் திட்டத்தில் நாம் உள்வாங்கியுள்ளோம்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் அனைவருக்கும் அவசியம். அந்த வகையில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் என அனைவருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் இந்திய வம்சாவளி மக்களாக புறக்கணிப்புக்குள்ளாகியிருந்த மலையக மக்களை இலங்கை பிரஜைகளாக உள்வாங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதன்முறையாக நாம் அதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
அந்த மக்களின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திலும் இதுவரை காலம் இந்திய வம்சாவளி என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் அவர்கள் இலங்கை மலையக மக்கள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்கள் அதனை நாம் பெருமையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment