(எம்.ஆர்.எம்.வசீம்)
மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எத்தகைய நோக்கமும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அவ்வாறான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான கருத்துக்களை தெரிவித்து இனவாத அரசியலை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கீழ்த்தரமான நாடகத்தை கைவிட வேண்டும் என்று அவர் சபையில் சாணக்கியன் எம்.பியைக் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி, சகல அமைச்சுகளும் மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்தமை தொடர்பில் பதிலளித்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறுகையில், ”இம்முறை மாகாண சபைகளுக்கு கடந்த வருடங்களைப் போன்று மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.
வீதிகளை அபிவிருத்தி செய்ய நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எந்த வீதியாக இருந்தாலும் அந்தந்த வீதிகள் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவையே. நாங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயற்படுகின்றோம் என்பதனை வடக்கில் உள்ள சில எம்.பிக்கள் அறிந்துகொள்வார்.
நாம் கடந்த காலங்களை விட மூன்று மடங்கு நிதியை மாகாண சபைகளுக்கு ஒதுக்கியுள்ளோம். எனினும் நீங்கள் இனவாத அரசியலை செய்ய வேண்டாம். அந்த கீழ்த்தரமான நாடகத்தை கைவிட வேண்டும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment