ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் மெளனம் காத்துவருவதானது அங்கு இடம்பெறும் அநியாயங்களுக்கு ஆதரவளிப்பது போன்றதாகும். அதனால் எங்களால் முடிந்தவகையில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய பலஸ்தீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக எழுதிய காஸா இனப் படுகொலை மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாருக் எழுதிய பலஸ்தீனத்திற்கு கண்ணீர் இல்லை என்ற நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (01) இடம்பெற்றது. இதில் தான் எழுதிய பலஸ்தீன் நூலை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் படுகொலைகளில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணிக்கின்றனர். இவர்களில் சிறுவர்களும் பெண்களுமே அதிகமாக கொலை செய்யப்படுகின்றனர்.
தற்போது இறுதி ஆயுதமாக இனப் படுகொலையை ஆரம்பித்துள்ளனர். அந்த மக்களுக்கான உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த இனப் படுகொலைக்கு எதிராக இன்று ஐரோப்பிய நாடுகள். ஸ்பைன், ஜேர்மன், அயர்லாந்து என அதிகமான நாடுகள் அணி திரள ஆரம்பித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு 80 வருடங்கள் ஆகின்றன. எம்மைப்போன்ற சிறிய நாடுகளுக்கு அநீதி ஏற்படாமல் உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கே ஐ.நா. உருவாக்கப்பட்டது. அதேபோன்று சட்டத்தை பாதுகாக்க சர்வதேச நீதிமன்றம் இருக்கிறது. சிறுவர்களுக்கு கல்வியை உறுதிப்படுத்த யுனிசெப் அமைப்பு இருக்கிறது. மனித உரிமை ஆணைக்குழு ஒன்று இருக்கிறது. இவை அனைத்தும் ஒரேஒரு (வீட்டோ பவரினால்) உயர் அதிகாரத்தினால் இன்று செயலிழக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் அனைத்தும் இன்று ஒரு பக்கத்தில் இருக்கும்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சில நாடுகள் மாத்திரம் உயர் அதிகாரத்தின் உதவியுடன் இதனை மேற்கொண்டு வருகின்றன.
இன்று மனித உரிமை, பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் என்பன வெற்று வார்த்தைகளாக்கப்பட்டுள்ளன. மனித உரிமைக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் ஹவாட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தடை செய்யப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் அவர்களின் நாடுகளுக்கு நாடு கடத்தப்படு கின்றனர். பேச்சு சுதந்திரம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் நாங்கள் மெளனமாக இருக்கக்கூடாது, இந்த பேரழிவுகளுக்கு முன்னால் தொடர்ந்தும் நாங்கள் வாய் மூடி மெளனமாக இருந்தால், அந்த இன அழிப்பு படுகொலைகளுக்கு நாங்களும் உதவுவது போன்றாகிவிடும் என்றார்.
No comments:
Post a Comment