(எம்.மனோசித்ரா)
மஹிந்தானந்த அழுத்கமகே போன்றோருக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. எமது ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது. எந்த வகையிலும் நீதித்துறையில் அரசாங்கம் தலையிடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட அமைச்சர்கள் கடந்த ஆட்சிக் காலங்களில் அந்தந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் நாம் எமது ஆட்சியில் இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதி, வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலேயே கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக தற்போது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில் அரசாங்கத்தின் அபிலாஷைகளும் முக்கியத்துவமுடையவையாகும்.
ஊழல், மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஸ்திரமாகவுள்ளது.
ஆனால் கடந்த அரசாங்கங்கள் இவ்வாறான வழக்குகளுடன் தொடர்புடையவர்களை அந்தந்த நிறுவனங்களுக்கே பொறுப்பாக நியமித்தன. அரசியல் தலைமைத்துவம் இவ்வாறானவர்களை பாதுகாக்கின்றது என்பதே அவற்றின் மூலம் நீதித்துறைக்கு வழங்கப்பட்ட செய்தியாகும். நாம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியிருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் நான் நீதித்துறை அமைச்சராக இருந்திருந்தாலும் மஹிந்தானந்தவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எண்ணி மகிழ்ச்சியடைந்திருப்பேன். எமது ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்வதாகக் கருத முடியாது. இந்த தீர்ப்பு அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment