(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சைபர் பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அம்சத்துடன் மாத்திரம் தொடர்புப்பட்டதல்ல, நாட்டின் பொருளாதார விடயங்களுடன் தொடர்புடையது. சைபர் பாதுகாப்பு சட்டமூலத்தை வெகுவிரைவில் சபைக்கு சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்துகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற தரவு பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஏன் சைபர் பாதுகாப்பு சட்டவரைவு குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. சைபர் பாதுகாப்பு என்பது பாதுகாப்பு அம்சத்துடன் மாத்திரம் தொடர்புப்பட்டதல்ல, நாட்டின் பொருளாதார விடயங்களுடன் தொடர்புடையது.
நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் சைபர் பாதுகாப்பு சட்டவரைவு தயாரிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சட்டவரைவின் உள்ளடக்கங்கள் தற்போதைய பூகோள காரணிகளுக்கு பூரணமாக அமையாது. ஆகவே புதிய விடயங்களுடன் சைபர் பாதுகாப்பு சட்டவரைவினை தயாரித்து, சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலத்தில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. சட்டமூலத்தின் 13 ஆவது பிரிவில் 'தரவு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும்போது அரச கூட்டுத்தாபனம் மற்றும் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்க கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் செயல்திறனை வினைத்திறனாக்க வேண்டுமாயின் அரச கூட்டுத்தாபனங்கள் நிறுவன கட்டமைப்பின் அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் . ஆகவே இந்த விடயத்தை திருத்தத்துக்குள் உள்வாங்குமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.
No comments:
Post a Comment