இன்று (28) காலை இலங்கையின் தென்பகுதிக் கடலில் இரண்டு படகு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களின் விளைவாக 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (27) மீன்பிடி நடவடிக்கைக்காக தேவேந்திரமுனை மற்றும் பேருவளை, மொரகொல்ல பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து கடற்படையிடம் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, அவர்களுடன் இணைந்து இலங்கை விமானப்படை Bell 412 ஹெலிகொப்டர் மற்றும் Y12 விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கரையிலிருந்து சுமார் 7 கடல் மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை, தேவேந்திரமுனை விபத்து
மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற எம்.டி.ஆர் 263 தினேஷ் 4 (MTR 263 Dinesh 4) என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஒரு வர்த்தகக் கப்பலுடன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளனர். விபத்தை தொடர்ந்து படகின் மேல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக இலங்கை கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
ஏனைய நான்கு பேரையும் தேடி இலங்கை கடற்படையினர் இன்று காலை 7.30 மணி முதல் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில், வர்த்தக கப்பல்கள் செல்லும் பாதையில் நிகழ்ந்துள்ளது.
மீன்பிடிப் படகின் கீழ் பகுதியில் மற்ற மீனவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை கடற்படையினர் சுழியோடிகளுடன் இணைந்து அப்பகுதியில் சுழியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏனைய மீனவர்களை தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உறுதிப்படுத்தினார்.
இவ்விபத்தில் 48 வயதான ஏ.டப்ள்யூ.பி. சமிந்த, ஏ.டப்ள்யூ.பி.எஸ். சமந்த, 41 வயதான எல்.எச்.டி. நிரோஷன், 58 வயதான ஏ.டி.எஸ்.டப்ள்யூ. ஷாந்த, 44 வயதான பி.பி.டி. சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகல்லை, பேருவளை, களுத்துறை மாவட்ட விபத்து
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, மொரகல்லை பிரதேசத்தில் இன்று காலை இரண்டு மீனவர்கள் சென்ற ஒரு நாள் fibreglass படகு (OFRP படகு) விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் இல்லாமல் படகு கடலில் காணப்பட்டது, அது தற்போது கரைக்கு கொண்டுவரப்படுகிறது. காணாமல்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் கரையிலிருந்து மிக அருகில் நிகழ்ந்துள்ளது. இரண்டு மீனவர்கள் இந்தப் படகில் சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அலுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரின் சகோதரர் துமிந்த நதுன் குமார ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு மீனவர்களையும் கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு இந்த சம்பவங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கும், தொடர்புடைய நிவாரணங்களை வழங்குவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், மீன்பிடி சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உறுதியுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய விபத்துக்களை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment