திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று (21) இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் தமிழ்த்தின போட்டியை முடித்துவிட்டு மூதூரை நோக்கி பயணித்த மூதூர் கல்வி வலயத்திற்கு சொந்தமான வாகனம், தம்பலகாமம் 98ஆம் கட்டைப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை சோபிதகம பகுதியைச் சேர்ந்த 61 வயதான குணரத்ன சந்ரசிறி மற்றும் 98 கல்மெடியாவ முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹேரத் சந்ரசேகர ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு திடீரென வந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துடன் தொடர்புடைய சாரதியான மூதூர் - நொக்ஸ் ரோட் பகுதியில் வசித்து வரும் 58 வயதான ஜயூப் லூத் என்பவரை கைது செய்துள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் பின்னர் வாகனத்தில் பயணித்த அதிகாரிகள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாகமும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment