நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷண சூரியப்பெரும, தற்போதைய அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றியதோடு, மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள நிதி அமைச்சின் செயலாளர் பதவியை பொறுப்பேற்பதற்காக கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சின் கீழ் உள்ள இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளராக பல வருடங்களாக மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் பங்களித்த சூரியப்பெரும, உலக வங்கியின் இலகுவில் வணிகமயமாக்கல் குறித்த, சர்வதேச தரவரிசைப்படி, சிறிய அளவிலான முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தரவரிசையை 74 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கு உயர்த்துவதற்கும் பங்களித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் வணிக நிர்வாகம் தொடர்பில் MBA பட்டத்தையும் பெற்றுள்ள அவர், மலேசியாவின் முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் (Management and Science University) கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் ஐக்கிய இராச்சியத்தின், பட்டய கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம் (CIMA) மற்றும் பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தின் (ACCA) உறுப்பினரும் ஆவார்.
அவர், பணமோசடி தடுப்பு செயலணியின் உறுப்பினராக மூலதனச் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டுள்ளதுடன், சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சிகளை பட்டியலிடுவதற்கான கொள்கைகள் உட்பட, நிதித்துறையில் தற்போதுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கும் அவர் பங்களித்துள்ளார். மேலும், தனியார் துறையின் உயர்மட்ட நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவி உட்பட பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதற்கு முன்னர் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் கடமையாற்றினார்.
No comments:
Post a Comment