கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு - வைத்தியர் சமல் சஞ்சீவ - News View

About Us

About Us

Breaking

Sunday, June 15, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு - வைத்தியர் சமல் சஞ்சீவ

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிரி, எம்.ஆர்.ஐ ஆகிய கதிரியல் பரிசோதனைகளும் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளர்கள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலையாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளது. எனினும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.

வைத்தியசாலை கையிருப்பில் இருக்க வேண்டிய அத்தியாவசிய மருந்துகளான நோய் எதிர்ப்பு மருந்துகள், மயக்க மருந்து, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்க்காக வழங்கப்படும் மருந்துகளுடன், அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிரி, எம்.ஆர்.ஐ ஆகிய கதிரியல் பரிசோதனைகளும் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. பரிசோதனை அறிக்கைகளை வழங்குவதற்கான கணினி இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது. எனினும் உரிய தரப்பினர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளின் பெருமளவான தொகையைச் செலவிட்டு கதிரியல் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். கதிரியல் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளியின் நோய்த் தொடர்பில் பரிசோதனை செய்து உரிய காலத்திற்குள் சிகிச்சை அளிப்பது அவசியம். காலதாமதத்தால் உயிராபத்தும் அதிகரிக்கலாம்.

வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் பதவிக்காக தகுதி வாய்ந்த ஒருவர் நியமிக்கப்படாமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாகப் பணிகள் சீர்குலைந்துள்ளன.

அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள குளிரூட்டிக் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையால் சிகிச்சை சேவைகளும் மந்தமடைந்துள்ளது. வைத்தியசாலையின் பிரேத அறையிலும் குளிரூட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சடலங்களை வைத்திருப்பதிலும் பாரிய நெருக்கடி உருவாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment