(எம்.மனோசித்ரா)
நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏமாற்றியிருக்கிறது. அதிகாரத்துக்காக கள்வர்கள் என விமர்சித்தவர்களுடனேயே கூட்டணியமைத்துள்ளது. இந்த அரசாங்கமும் பாரம்பரிய அரசியலிலேயே ஈடுபடுகிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தம்மை நம்பி வாக்களித்த மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. 70 ஆண்டுகள் நாட்டுக்கு சாபம் எனக் கூறியவர்களுடன் இணைந்து இன்று இந்த அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்திருக்கிறது.
அதிகாரத்துக்காக கள்வர்கள் என விமர்சித்தவர்களுடன் இந்த அரசாங்கம் கூட்டணியமைத்துள்ளது. புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அரசாங்கம் ஏமாற்றத்தையே வழங்கியிருக்கிறது.
அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் கூறி மக்களை ஏமாற்றினர். ஆனால் இன்று அதிகாரம் கிடைக்கப் பெற்ற பின்னர் சம்பிரதாயபூர்வ அரசியலேயே தேசிய மக்கள் சக்தியும் ஈடுபட்டுள்ளது.
கடந்த அரசாங்களின் ஊழல், மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பி.யினர் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்தனர். ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் உப்பு மோசடி, அரிசி மோசடி என்பன இடம்பெற்றுள்ளன.
கடந்த அரசாங்கங்களையே இந்த அராசங்கமும் பின்பற்றுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மோசடிகளைக் கட்டுப்படுத்தி அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறிய அரசாங்கம் இன்று முன்னர் காணப்பட்டதை விட உணவு பொருட்களின் விலைகளை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றது.
கெஹெலிய ரம்புக்வெல்லவை காண்பித்து ஊடக பிரசாரங்களை முன்னெடுத்து, ஏனைய பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதியையும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment