(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
323 கொள்கலன் விடுவிப்பு தற்போதைய பிரதான பேசு பொருளாக உள்ளது. சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிக்குமாறு அரசாங்கம் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. எம்மையும் தொடர்புப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிவருமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின்போது வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு துறைமுகம், காலி துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை துறைமுகம், ஒலுவில் துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், பருத்தித்துறை துறைமுகம், மன்னார் இறங்குதுறை, புத்தளம் துறைமுகம் ஆகியன இலங்கையில் உள்ள பிரதான துறைமுகங்களாக காணப்படுகின்றன.
கொழும்பு துறைமுகம் 2024 ஆம் ஆண்டு 99 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், 56 பில்லியன் ரூபாய் செலவு பதிவாகியுள்ளது.
அதேபோல் திருகோணமலைத் துறைமுகம் கடந்த ஆண்டு 2.8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1.5 பில்லியன் ரூபா செலவு பதிவாகியுள்ளது.
அதேபோல் காலி துறைமுகம் கடந்த ஆண்டு 907 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், 958 மில்லியன் ரூபா செலவு பதிவாகியுள்ளது.
அதேபோல் 2032ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அபிவிருத்தி செய்யப்படும். தெற்கு முனையத்தின் பணிகளை இந்த ஆண்டு 50 சதவீதமளவில் நிறைவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை ஒருமித்த வகையில் அபிவிருத்தி செய்வற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல துறைமுகங்களும் முறையான திட்டமிடலுக்கு அமைய அபிவிருத்தி செய்யப்படும்.
துறைமுகங்கள் மற்றும் சுங்கத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிப்பதற்கு எமது அரசாங்கத்தில் எவரும் சுங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
323 கொள்கலன்கள் விடுவிப்பு தற்போதைய பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. இந்த விவகாரத்தில் என்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிவரும் என்றார்.
No comments:
Post a Comment