அ.ருத்ரா
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக் கோரியும், நீதியான விசாரணை நடத்துமாறும் அரசினை வலியுறுத்தி இன்று (28) பேத்தாழை, வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது.
அந்த மனுவில், எமது தாய் நாட்டின் இறைமையும், தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்களிலிருந்து இவ்வாறான தேசபக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
ஆகவே, சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
No comments:
Post a Comment