றிப்தி அலி
கடந்த 11 மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் - குர்ஆனின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய நூல்களை அடிக் குறிப்பிட்டு வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தின் போதே இந்த சிபாரிசு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக குறித்த சிபாரிசு புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிரதிகளும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும், இஸ்லாமிய நூல்களும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு கடந்த 2024.05.16ஆம் திகதி ஜித்தாவிலிருந்து அனுப்பப்பட்டது.
இந்த இஸ்லாமிய நூல்களைக் கொண்ட கொள்கலன் 2024.06.22ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்தது. எனினும், குறித்த கொள்கலனிலுள்ள குர்ஆன் பிரதிகளை மாத்திரமே வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு வழங்கியது.
இதனால், இந்த கொள்கலனில் காணப்பட்ட அல்குர்ஆனின் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய நூல்கள் கடந்த பல மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதனை வெளியில் எடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்;ச்சியாக மேற்கொண்டு வந்ததுடன் பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பியமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment