யுத்தத்தை வெற்றி கொண்டு சகலரும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்திய படையினரைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சிங்களத்தில் உரையாற்றினார். இராணுவத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டிய அவர், கனடாவில் சின்னம் வைக்கப்பட்டமை நாட்டைப் பிரிப்பதற்கல்லவென்றும் கூறினார்.
பிரிகேடியர் பால்ராஜ் என்பவர் தெற்கில் உள்ள சிங்களத் தலைவர். இராணுவத்தினர் மதிப்பளித்த ஒருவர். அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அவரது இருதயத்தில் சத்திர சிகிச்சை செய்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கூட்டி வந்து பாதுகாத்தனர். இதனாலேயே சிங்கள இராணுவத்தினருக்கு மதிப்பளிப்பதாகவும் யாழ். மாவட்ட எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நாட்டிலுள்ள எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவரை தாம், மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கனடாவில் சின்னம் வைக்கப்பட்டமைக்கான காரணம் இனப்படுகொலை நடந்திருக்கின்றது என்பதை காட்டுவதற்கே ஒழிய, இந்த நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு அல்ல. அதை நாம் கேட்கவும் இல்லை. அதை சகலரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றியதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அர்ச்சுனா தொடர்ந்தும் உரையாற்றியதாவது, ”தமிழரசுக் கட்சி என்பது வட மாகாண மக்களின் இதயம். எமது தேசிய தலைவர் உருவாக்கிய அந்தக் கட்சியை காசு, கசிப்பு சாராயத்திற்காக வாக்களிக்கப் பழக்கியுள்ளதாக எமது அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அவரது கூற்று எமது தமிழ் மக்கள் தேசிய உணர்வு இல்லாதவர்கள். அந்த மக்கள் எமது தேசியத் தலைவருடன் பயணிக்காதவர்கள். எங்களது தமிழ் மக்கள் சாராயத்திற்காக வாக்களிப்பவர்கள் என்று எமது இனத்தை அமைச்சர் கொச்சைப்படுத்துகின்றார்.
நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழன் ஒரு போதும் காசுக்காக வாக்களிக்க மாட்டான். உங்களுக்கு இது ஒரு அரசியலாக இருக்கலாம். தேசியத் தலைவர் ஒரு காலத்தில் அப்போது தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னபோது அத்தேர்தலை தெட்டத் தெளிவாக மக்கள் புறக்கணித்தனர்.
தேசியத்துக்காக வாழ்ந்த தமிழ் மக்களை காசுக்கு, கசிப்புக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் கூறுவாரானால் அது மிகவும் கவலைக்குரிய விடயம். எமது தலைவர் பிரபாகரன் இருந்தபோது வடக்கில் ஒரு கசிப்புக் கடையும் இருந்ததில்லை.
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாகவும் கனடாவிலே எமது உறவுகள் எமது இனப்படுகொலை தொடர்பாக வைத்திருக்கின்ற ஒரு சின்னம் தொடர்பாகவும்தான் பேசப்படுகிறது.
எங்கள் மனதில் பாரிய வலி உள்ளது. எல்லாளன் என்பவர் அநுராதபுரத்தை ஆண்ட ஒரு தமிழ் மன்னன். ஆனால் இன்றுவரை துட்டகைமுனுவாக இருக்கட்டும். சிங்கள மக்களாக இருக்கட்டும் இன்று வரை அம்மன்னனை மக்கள் மதிக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் வீரத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். மக்களுடைய அர்ப்பணிப்பை மதிக்கத் தெரிந்தவர்கள். அந்த வகையில் எங்கள் அமைச்சருக்கு தமிழ் மண்ணின் வீரம் தெரியாது.
ஆனால் அரங்கங்களையும், விளையாட்டு மைதானங்களையும் வடக்கில் நிர்மாணிக்கப் போவதாக தெரிவிக்கின்றார்.
ஒன்றை இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றே நாம் கேட்கின்றோம். அதைவிடுத்து நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும், வேறு அரசாங்கம் வர வேண்டும் என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை.
கடந்த 78 நாட்கள் நான் பாராளுமன்றத்தில் பேச முற்படும்போது மைக் நிறுத்தப்பட்டது. ஏன் ஒரு சுயாதீன எம்.பிக்கு அந்தளவு பயப்படுகின்றீர்கள். நான் தவறான வசனங்களையா உபயோகிக்கின்றேன்?
சம்பந்தப்பட்ட அமைச்சரே பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக கூறினார். பெரஹெர செல்லும்போதும் எல்லாளனின் சமாதிக்கு அருகில் தரித்து நின்றே செல்கின்றது. அந்தளவு மதிப்பளிக்கப்படுகின்றது எனினும் எனக்கு இந்த பாராளுமன்றத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றதா?
பாராளுமன்றத்தில் 225 பேர் அரசியல்வாதிகள் இருந்தாலும் நான் ஒரு அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு டொக்டர். இதனை விட்டு விட்டுச் சென்றால் என்னால் ஒரு நாளில் ரூ. 10 இலட்சம் சம்பாதிக்க முடியும். வேறு எவராவது அவ்வாறு செய்ய முடியுமானால் கைகளை உயர்த்தட்டும்.
தற்போது நாட்டில் உப்புத் தட்டுப்பாடு. ஆனால் வடக்கு மக்கள் கடல் நீரை பயன்படுத்தி சமைக்கின்றனர் உங்களால் அது முடியுமா? வடக்கு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியமைக்காக என்னை சிறையில் அடைத்தனர்.” என்று தெரிவித்துக் கொண்டிருந்தபோதே மைக் நிறுத்தப்பட்டது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment