(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாடசாலை மாணவியின் தற்கொலையுடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும். பல்கலைக்கழகங்களில் தீவிரமடைந்துள்ள பகிடிவதை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், அவர்கள்தான் பகிடிவதையின் நிர்மாணிப்பாளர்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அ' அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் நாமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மக்களுக்கு பல போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்களைக் குறிப்பிட்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இன்று திண்டாடுகிறது. தேர்தல் காலத்தில் நாம் பொய்யுரைக்கவில்லை. இயலுமானதையே குறிப்பிட்டோம். சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள். அரசியலில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளோம்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புக்களினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலை காணப்படுகிறது. அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு பகிடிவதை தொடர்பில் புதிதாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை. அவர்கள் பகிடிவதைகள் தொடர்பில் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் கர்த்தாக்கள் அவர்கள்தான். தமது அரசியல் தேவைக்காக பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை வன்முறையாக மாற்றியமைத்தார்கள்.
பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது பிரதான பேசு பொருளாகியுள்ளது. எமது சக உறுப்பினர் மனோ கணேசன் அந்த மாணவி தொடர்பில் இங்கு பேசினார். அதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்தார்.
இந்த மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கவனம் செலுத்தாது அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதனை அரசியலாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. உயிரிழந்த மாணவிக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து பேசு பொருளாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கிசையில் 19 வயது இளைஞன் பகல் வேளையில் பிரதான வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், 'இந்த இளைஞனின் தாயார் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார். அதனால்தான் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது' என்றார்.
இவ்வாறு எப்படி கூற முடியும்? முறையான விசாரணைகள் நடந்ததன் பின்னரா இவ்வாறு குறிப்பிட்டார்? தாய் போதைப் பொருள் வியாபாரி என்றால் அந்த இளைஞன் ஏன் இளம் வயதில் வீதிகளை துப்பரவு செய்ய வேண்டும்? அவர் கோடீஸ்வரராக அல்லவா இருந்திருப்பார்? பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்து இக்கொலையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
போதைப் பொருளுடன் தொடர்புபட்டிருந்தாலும் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்ல முடியுமா? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிப்பதாக கூறிக்கொண்டு வந்தவர்களுக்கு இன்று தனி மனித பாதுகாப்பு தொடர்பில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment