(ஸ்டெப்னி கொட்பிறி)
நாங்கள் சுதந்திரம் அடைந்த நாட்டில் உள்ளோம். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது மிகவும் முக்கியமாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தையமுத்து தனராஜ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தையமுத்து தனராஜ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவது வழக்கம். கைது செய்யப்படும் சந்தேகநபர் சட்டத்தினால் “குற்றவாளி” என தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் “குற்றவாளி அல்ல”.
ஆனால் கைது செய்யப்படும் சந்தேகநபர்களில் பலர், சட்டத்தினால் “குற்றவாளி” என நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு பெறப்படுவதற்கு முன்னரே பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
சட்டத்தின் ஆட்சி உள்ள ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தினால் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் உயிரிழப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இதைத் தடுப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டி கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டி பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடந்த 17ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிரைப் பாதுகாக்க உதவுமென நம்பப்படுகிறது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பல புனர்வாழ்வு நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் சிறைக் கூண்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள், பொருட்கள், உணவுகள் ஆகியவை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment