இலங்கை வருகிறது சீன அமைச்சர் தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

இலங்கை வருகிறது சீன அமைச்சர் தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது.

இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவித்துள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இரு தரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிக தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்தவம் பெறுகிறது. ஏனெனில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் பிராந்தியத்தின் வணிக இராஜதந்திரம் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தொடர்ந்தும் சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது. வரி கட்டண அளவீடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் அளவு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு சுற்றுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கின.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஒப்புக் கொண்டாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடனேயே சீன அமைச்சர் இலங்கை வருகிறார்.

No comments:

Post a Comment