நழீமின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு? : முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 15, 2025

நழீமின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு? : முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்தது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல. இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக, முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 4 மாதங்களுக்குள் இராஜினாமா செய்த வரலாற்றில் இது முதல் தடவையாகும்

இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கம் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும், உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment