(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழங்கப்படும் விவாகரத்து வழக்கு தீர்ப்புகள் எமது நீதிமன்றங்களில் அனுமதிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என்பதை அறியாமல், அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தீர்ப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுப்பதற்கு இடமிருக்கிறது. அதனால் அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாடு நீதிமன்றங்களில் வழங்கப்படும் விவாகரத்து வழக்கு தீர்ப்புகள் எமது நாட்டு நீதிமன்றங்களில் அனுமதித்துக் கொள்ளும் சட்டம் கடந்த வருடம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டபோதும் அதனை நடைமுறைப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.
அது தொடர்பான வரத்தமானி அறிவிப்பை வெளியிடும் பொறுப்பு நீதி அமைச்சருக்கே இருக்கிறது. அதனால் அது தொடர்பான வர்த்மானி அறிவிப்பை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டாலும் அது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதை அறியாமல் இலங்கை நீதிமன்றங்களில் இது தொடர்பில் பாரியளவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தீர்ப்பும் பெறப்பட்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக மாற இடமிருக்கிறது.
அதனால் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள பாராளுமன்றத்தில் இந்த சட்டம் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திகதியில் இருந்து இது சட்டமாக்கப்படும் என தெரிவித்து இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அதனை நீதி அமைச்சருக்கு செய்ய முடியும் என்றார்.
இதற்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில், வெளிநாட்டு தீர்ப்புகளை எமது நாட்டு நீதிமன்றங்களில் அனுமதிக்கும் நாடுகள் தொடர்பில் பட்டியல்படுத்தி, சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றுக்கொள்ள அனுப்பி இருந்தோம். அது தொடர்பான பரிந்துரைகளை அவர்கள் தற்போது அனுப்பி இருக்கிறார்கள். அதனால் மிக விரைவாக அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட முடியும் என்றார்.
No comments:
Post a Comment