அனைத்து பிரச்சினைகளையும் கதைக்கும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு தொடர்பாக மாத்திரம் எதுவும் கதைக்காமல் இருப்பது ஏன்? - அஜித் பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, March 2, 2025

அனைத்து பிரச்சினைகளையும் கதைக்கும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு தொடர்பாக மாத்திரம் எதுவும் கதைக்காமல் இருப்பது ஏன்? - அஜித் பி பெரேரா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பொறுப்பு நீதி அமைச்சருக்கே இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பின் திட்ட வழிகாட்டல் வரைபு என்ன என்பதை நீதி அமைச்சர் தெரிவிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் கதைக்கும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு தொடர்பாக மாத்திரம் எதுவும் கதைக்காமல் இருப்பது எமக்கு பாரிய பிரச்சினையாகும் என அஜித் பி பெரேரா தெவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரமும் எமது கொள்கையும் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதனால் அரசாங்கம் தெரிவித்துள்ளதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பொறுப்பு நீதி அமைச்சருக்கே இருக்கிறது.

அதனை மேற்கொண்டு அனுமதித்துக் கொள்வதற்கான ஆதரவு அரசாங்கத்திடம் இருக்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றனர்.

அதேநேரம் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க சிறந்த அரசியல் சூழல் தற்போது இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு திட்ட வழிகாட்டல் வரைபு என்ன ? என நீதி அமைச்சரை கேட்கிறேன். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஜனாதிபதியிடம் இந்த சபையில் கேட்டபோதும் அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

அதேநேரம் ஜனாதிபதி நாட்டில் பல முக்கிய நிகழ்வுகளில் உரையாற்றி இருக்கிறார். இதன்போது அதிகமான பிரச்சினைகள் தொடர்பில் பேசி இருந்தார். ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக காணப்படும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி எதுவும் கதைப்பதில்லை. ஆனால் அரசாங்கம் அதிகாரத்துக்கு வரும்போது மக்களுக்கு தெரிவித்த பிரதான விடயங்களில் புதிய அரசியல் அமைப்பும் ஒன்றாகும்.

இதேவேளை, நிதி தொடர்பான வழக்குகள் கொழும்பு நீதிமன்றங்களில் குவிந்து காணப்படுவதால் அது தொடர்பான வழக்கு விசாரணைகளும் தாமதமாகும் நிலை ஏற்படுகிறது. அதனால், சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நிதி தொடர்பான வழக்குகளை தொடுப்பதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment