தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதன்போது தெரிவிக்கையில், எமது அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்காது என்பதோடு, எம்.பி.க்கள் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் குறித்த வாகனத்தை தமது 5 வருட பதவிக்காலம் முடிந்ததும், திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
அதிசொகுசற்ற வாகனத்தை வழங்குவதற்கு தற்போது வாகன கையிருப்பு பட்டியலை தயாரிக்க நேரமில்லை.
இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் எமக்கு இல்லை. எமது முன்னுரிமை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அல்ல எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
5 வருடங்களுக்கு பின்னர் தற்போது வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளை வழங்க எமது அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போது நாம் பொருளாதாரத்தை மீளமைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதற்கேற்றாற்போல், வாகனங்களை இறக்குமதி செய்ய நாங்கள் குறிப்பிட்ட அளவில் அனுமதி வழங்கியுள்ளோம் என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இதன் மூலம் எமது வெளிநாட்டு கையிருப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கையுடனேயே வாகனங்களை இறக்குமதி செய்கிறோம்.
இதன் ஆரம்ப நிலையில் முழுமையாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment