எதிரானவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர் : பிற்போடும் பாவச் செயலுக்கு ஜேவிபியும் ஒத்துழைப்பு வழங்கியது - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

எதிரானவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர் : பிற்போடும் பாவச் செயலுக்கு ஜேவிபியும் ஒத்துழைப்பு வழங்கியது - நாமல் ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல, தேர்தலை பிற்போடும் பாவச் செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். இருப்பினும் தேர்தல் நடவடிக்கைகள் சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறாக அமையக்கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாக உள்ளோம். நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்தபோது மக்கள் விடுதலை முன்னணியினர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதனை ஆளும் தரப்பினர் அறியமாட்டார்கள்.

ஆகவே தேர்தலை பிற்போடும் பாவச் செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த பாவச் செயலில் நாங்களும் எமது கட்சியும் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை.

சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை பிற்போடாமல் நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

இருப்பினும் எதிர்வரும் மாதம் 4 முதல் 5 லட்சம் வரையிலான மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். 80 ஆயிரம் பேர் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆகவே பரீட்சைக்கு மத்தியில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏதாவதொரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே பரீட்சை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துகிறது. சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் செயற்பாட்டை விமர்சித்து முகப்பு புத்தகத்தில் கருத்து பதிவேற்றம் செய்த மாத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் அரசாங்கத்தின் கட்டளை பிறப்பிக்கும் நபரால் அச்சுறுத்தலுக்குட்படுத்தபபட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் கட்டளை பிறப்பிக்கும் நபர்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு சார்பானவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வாறான செயற்பாடு அரசாங்கத்துக்கு அழகல்ல.

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க நல்லவர், அவர் எதிர்பக்கம் சென்றதன் பின்னர் அவர் நல்லவரல்ல, கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கமாக செயற்பட்டது என்றார்.

No comments:

Post a Comment