நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பில்லை - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பில்லை - தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடமணிந்து துப்பாக்கிதாரி சாட்சிக்கூண்டில் இருந்த சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இது பாரதூரமானது. இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணியை போன்று வேடமணிந்து நீதிபதிகள் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் இருந்த சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளார். இது பாரதூரமானதொரு பிரச்சினையாகும்.

செவ்வாய்க்கிழமை (18) இரவு ஒரு குடும்பத்தார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நீதிபதிகள் எவ்வாறு சுதந்திரமாக செயற்பட முடியும். இதனை அலட்சியப்படுத்த முடியாது.

இவ்வாறான செயற்பாடுகளினால் நீதிமன்றத்தில் நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. பதில் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி சிறந்த முறையில் பேசுகிறார். ஆனால் கடந்த ஓரிரு மாதங்களில் மாத்திரம் 78 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைகள் குறித்து அரசாங்கம் கடுமையான முறையில் அவதானம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் இது எங்கு செல்லும் என்பது எமக்கு தெரியாது என்றார்.

No comments:

Post a Comment