(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் பல்துறை அபிவிருத்திகளில் பெரும்பாலான பங்கு கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கப் பெறும். இவற்றுக்கு மேலதிகமாக இந்திய அரசின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும். ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர். இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாகாணத்தின் அபிவிருத்தி பிறிதொரு நாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதை அவதானித்துள்ளோம்.
ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து விசேடமாக மேற்கோள்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு முதலீட்டுடன் விசேடமாக அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக இந்திய அரசின் ஒத்துழைப்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதியுதவி கிடைக்கும்.
இந்த சிறப்பு ஒத்துழைப்புக்கு மேலதிகமாக வரவு செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் பெரும்பாலான பங்கு கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கும்.
கிராமிய, கல்வி, சுகாதாரம், கடற்றொழில் உட்பட பல துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி கிழக்கு மாகாணத்துக்கு கிடைக்கப் பெறும். ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment