(செ.சுபதர்ஷனி)
மேல் மாகாண ஆளுநர் பணிமனையின் மூலம் வழங்கப்பட்டுள்ள வருடாந்த சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்களுக்கான பணியிட மாற்றம் தொடர்பான நியமனம் (2024) மேன் முறையீட்டினை அடுத்து மேல் மாகாண ஆளுநர் பணிமனையின் மூலம் மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மேல் மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த கடிதத்தில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பணியிடமாற்றத்துக்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த மாதம் வரை இடை நிறுத்தப்பட்டிருந்த இடமாற்றத்துக்கான நியமனத்தை, பெப்ரவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்துமாறும், அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இடமாற்ற நியமனத்துக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஒருதலைப்பட்சமாகவும், வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றாமலும் மேற்படி இடமாற்ற முறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி இடமாற்றம் தொடர்பில் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் மேல் மாகாண ஆளுநருக்கு வழங்கியுள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்நாட்டு மக்களுக்கும், சுகாதார சேவைக்கும் பொறுப்புள்ள ஊழியர்களாக எமது கடமையை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறோம்.
சுகாதார சேவையில் பல நெருக்கடிகள் எழுந்தபோதும் எம்மால் இயன்றவரை அவற்றுக்குத் தீர்வுகாண முன்னின்றோம்.
எனினும், எமக்கு நியாயமற்ற முறையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே இடமாற்றம் தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் முறைபாடளித்தும் அது பயனற்றதாகி உள்ளது.
ஆகையால் நியாமற்ற தீர்மானத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை முன்னர் எமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் முறையாக பதிலளிக்க வேண்டும்.
மாறாக சுகாதார ஊழியர்களை பலவந்தமாக இடமாற்றத்தை ஏற்குமாறு வற்புறுத்தல்கள் ஏதேனும் இடம்பெறும் பட்சத்தில், நாடளாவிய ரீதியில் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராக உள்ளோம்.
No comments:
Post a Comment